GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி அரசு இல்லத்தில் இருந்து பெரும் அளவு பணம் கைப்பற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மார்ச் 14 ஆம் தேதி அன்று, அவரது வீட்டில் உள்ள சேமிப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஏராளமான பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, ​​யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக ‘உள் விசாரணை’ நடைபெற்று வருகிறது. இதற்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மார்ச் 22 ஆம் தேதி இரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த சம்பவம் குறித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவின் அறிக்கையும், யஷ்வந்த் வர்மாவின் வாதமும் இதில் உள்ளன.

தற்போது, ​​உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சிறிது காலத்திற்கு எந்த நீதித்துறைப் பொறுப்பும் வழங்கப்படக்கூடாது என்று முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இதுபோன்ற வழக்குகளில் இதுவரை என்ன நடந்துள்ளது?

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசு என்னென்ன வசதிகளை வழங்குகிறது?

இந்தியாவில், உயர் நீதிமன்ற நீதிபதி எனும் பதவி ஓர் அரசியலமைப்பு பதவி ஆகும். நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்கள் பதவியில் நியமிக்கப்படுகிறார்கள்.

7வது பே கமிஷனின் கீழ், அவர்களது மாதச் சம்பளம் ரூ.2.25 லட்சம். மேலும் அலுவலக வேலைக்காக ரூ.27,000 மாதச் சலுகையும் பெறுகிறார்கள்.

நீதிபதிகள் வசிப்பதற்கு அரசாங்கத்தால் வீடுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அரசாங்கம் வழங்கும் வீட்டை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வீட்டு வாடகைக்கு தனி பணம் கிடைக்கும். இந்த வீட்டைப் பராமரிப்பதற்கும் அரசாங்கம் பணம் வழங்குகிறது. அவர்களின் வீடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைக்கும். மேலும் ரூ 6 லட்சம் வரையிலான தொகை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வழங்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு ஒரு வாகனமும் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு மாதமும் 200 லிட்டர் பெட்ரோல் போட அனுமதிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர, மருத்துவ வசதிகள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றையும் அரசாங்கமே கவனித்துக் கொள்ளும்.

ஊழலைத் தவிர்க்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யவும், நீதிபதிகளுக்கு போதுமான ஊதியம் இருப்பது முக்கியம்.

நீதிபதிகள் தங்கள் பணியை அச்சமின்றிச் செய்ய, அரசியலமைப்பில் அவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முறையான பதவி நீக்க நடைமுறைகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, மூலமே பதவியில் இருந்து அகற்ற முடியும்.

ஒரு நீதிபதியை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய முடியும்?

இந்த பதவி நீக்க நடைமுறை பல்வேறு செயல்முறைகளை உள்ளடக்கியது.

மக்களவையின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் ஒரு நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை முன்மொழிந்தால், சபாநாயகர் அல்லது அவைத் தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, மூன்று பேர் கொண்ட குழு இதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று குழு கண்டறிந்தால், இந்த வழக்கு அங்கேயே முடிந்துவிடும்.

ஆனால் விசாரணைக் குழு நீதிபதி மீது தவறு உள்ளது என கண்டறிந்தால், அது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறும்.

ஒரு நீதிபதியை நீக்குவதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும்.

குடியரசு தலைவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்து உத்தரவிடுவார்.

இன்று வரை இந்தியாவில் எந்த நீதிபதியும் இந்த முறையில் நீக்கப்படவில்லை. ஆனால், குறைந்தது ஆறு உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடந்துள்ளன.

பதவி நீக்கத்தைத் தவிர, உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படலாம். ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றத்தின் சில முடிவுகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

இதுவரை எந்த உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை.

நீதிபதிகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும்?

ஊழல் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் உயர் நீதிமன்றநீ திபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் காவல்துறையினர் எந்த நீதிபதி மீதும் தாமாகவே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய முடியாது.

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்று, பின்னர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே. வீராசாமிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டபோது, ​​உச்ச நீதிமன்றம் 1991 ஆம் ஆண்டு தனது முடிவில் இவ்வாறு கூறியிருந்தது.

பின்னர் 1999 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க ‘உள் விசாரணை’ செயல்முறையை உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. ஒரு நீதிபதிக்கு எதிராக புகார் பெறப்பட்டால், முதலில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அந்தப் புகாரை விசாரிக்க வேண்டும் என்று அந்தச் செயல்முறை கூறுகிறது.

புகார் ஆதாரமற்றது என்று அவர்கள் கண்டறிந்தால், வழக்கு அங்கேயே முடிந்துவிடும். இது நடக்கவில்லை என்றால், குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதி பதிலளிக்குமாறு கேட்கப்படுவார். நீதிபதி அளிக்கும் பதிலிலிருந்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று தலைமை நீதிபதி கருதினால், அந்த வழக்கு முடித்து வைக்கப்படும்.

இந்த விவகாரம் மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு குழுவை அமைக்கலாம். இந்த விசாரணைக் குழுவில் 3 நீதிபதிகள் நியமிக்கப்படுவர்.

விசாரணைக் குழு, நீதிபதியை நிரபராதி என்று அறிவிக்கலாம் அல்லது நீதிபதியை ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தலாம்.

நீதிபதி ராஜினாமா செய்ய மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் விசாரணைக் குழு தெரிவிக்கலாம்.

உள் விசாரணைக் குழுவின் முடிவிற்குப் பிறகு, உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ-யிடம் உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டுக்கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.என். சுக்லாவுக்கு எதிராக உள் விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு, அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் மீதும் சிபிஐ ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. அவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

முன்னதாக மார்ச் 2003 இல், முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஷமித் முகர்ஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

நன்றி, பி. பி. சி.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத

RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 129 Points / குறிப்புகள். RTI சட்டத்தின் நோக்கங்கள், ஒரு அரசு அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் குடிமக்கள் கேட்டு பெறலாம். பார்வை

பொது ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க CRPC 197 பிரிவின் கீழ் அனுமதி பெறத் தேவையில்லை.பொது ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க CRPC 197 பிரிவின் கீழ் அனுமதி பெறத் தேவையில்லை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 அலுவல் ரீதியாக இல்லாத பணியில் ஈடுபடுவதால் நிகழும் குற்றங்களுக்கு, பொது ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க CRPC 197 பிரிவின்