ஓட்டல் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் நடத்துபவர்களுக்கு ஓர் இனிப்பு செய்தி.!
THE HONOURABLE MR.JUSTICE KRISHNAN RAMASAMY W.P.No.10512 of 2018 and W.M.P.Nos.12478 & 12479 of 2018)
இரவு 10.30 மணிக்குள் உணவகங்களை மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் துரித வகை உணவுகள் நடத்திவந்த எஸ். குணராஜா என்பவர் தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை விசாரித்த மாண்பமை நீதியரசர் திருமிகு. கிருஷ்ணன் இராமசாமி அவர்கள் இரவு 10.30 மணிக்குள் உணவகங்களை மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்று தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றி குற்ற செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க ஆவண செய்ய வேண்டிய காவல்துறை இதுபோன்ற உணவகங்கள் மற்றும் சாலையோர துரித வகை உணவகங்களை 10.30 மணிக்குமேல் பூட்டியே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவது என்பது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்தார். இது இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 19(1)(g)-இன் கீழ் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 21 வழங்கப்பட்டுள்ள கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கான உத்தரவாதத்திற்கு எதிரான செயலாகவும் இருக்கிறது என்றும் குறிப்பிடுள்ளார்.
இதுபோல், இந்த நேரத்திற்குள் கடையை மூட வேண்டுமென்று வற்புறுத்துவதற்கு உரிய அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு.
அதுவும் உரிய முறையில் அரசாணை வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைத் தவிர தனிப்பட்ட முறையில் வேறு யாரும் தொழில் புரிபவர்களிடம் மிரட்டி அச்சுறுத்தி கடையை அடைக்க வேண்டும் எனவற்புறுத்த முடியாது. மேலும், 2019ம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் (G.O. (MS) No.60 /28.05.2019 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை இரவு பகல் முழுவதும் (24 x 7) நடத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒவ்வொரு கடை உரிமையாளரும் தன்னுடைய வாடிக்கையாளர்களின் வருகையை ஒட்டி அதற்கேற்றவாறு திட்டமிட்டு கடையை திறக்கவும் மூடவும் செய்யலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையும் கூட. மேலும், இரவு நேரங்களில் உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு கிடைக்காது என்றால் அது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இரவு 10.30 மணிக்கு மேல் உணவகங்கள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், செக்யூரிட்டி கார்டுகள் ஆகியோருக்கு தேவையான உணவு கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. மேலும், இதை நம்பி இரவு நேரங்களில் உணவை டெலிவரி செய்யும் பணி செய்து வரும் Swiggy, Zomato போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வாதாரமும் தடைப்பட்டு விடும் என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சமூக விரோதிகள் கண்டறிந்து அவர்களை ஒடுக்குவதை விடுத்து துரித உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றை நடத்துபவர்கள் மீது கடுமை காட்டக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு கடையை மூட வேண்டிய நேரத்தை உரிய முறையில் நிர்ணயித்து இனிவரும் காலங்களில் இதில் எவ்வித சிக்கலும் இல்லாத வகையில் சிறந்த வழிகாட்டுதல் வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
