வெளிநாட்டு வேலைக்காக 5 ஆண்டு பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுமதி
இரண்டு குற்றவியல் வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு, வெளிநாட்டில் வேலைக்கு செல்ல 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதி வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நபருக்கு ஓமான் நாட்டில் புதிய வேலை கிடைத்ததால், விசா பெற குறைந்தது 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் தேவைப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக அவர் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும், வெளிநாடு செல்லவும் அனுமதி கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கீழமை நீதிமன்றம் அனுமதி அளித்தாலும், பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலத்தை குறிப்பிடவில்லை.
இதனால் அவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி, 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ். டயாஸ், சட்ட ரீதியாக இதற்கு தடையில்லை என்று தெரிவித்தார். ஆனால் அந்த நபர் விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் நிரந்தர விலக்கு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தேவையானபோது வீடியோ மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
அத்துடன், இந்த மனுக்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும், பாஸ்போர்ட் புதுப்பிப்பு விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு விதிகளின்படி பரிசீலித்து தகுதி இருந்தால் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து அந்த நபரின் மனுவை நீதிமன்றம் அனுமதித்தது.
