குண்டர் சட்டம் என்றால் என்ன? யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாயும்?
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்பு சட்டம் தான் குண்டர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் 1982ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள்,
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், உள்பட பல குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு திருட்டு வீடியோ, சி.டி குற்றமும், 2006ம் ஆண்டு மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் சேர்க்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி கைது செய்யப்படும் நபர் மீது எவ்வித நீதிமன்ற விசாரணையும் நடத்தப்பட வேண்டியதில்லை. அதுபோல ஒரு வருடம் கட்டாய சிறை தண்டனை உண்டு. அவர்களுக்கு பிணை (ஜாமின்) வழங்கப்படாது. இந்த சட்டத்தை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் வழங்கக்கோரி ஒரு உயர்நீதி மன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவை அணுகிதான் முறையிட முடியும்.
இந்த சட்டம் தமிழகத்தில் அவ்வப்போது பலர் மீது பாய்ச்சப்படுவதும், பின்னர் நீதிமன்றங்கள் அவர்களை குண்டர் சட்டத்திலும் இருந்து விடுவித்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.இதன் காரணமாக குண்டர் சட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. அரசு பழிவாங்கும் நோக்கில் பலர்மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியதும் அம்பலமானது. இதுபோன்ற செயல்கள் காரணமாக குண்டர் சட்டம் விவாத பொருளாகி உள்ளது.
குண்டர் தடுப்பு சட்டம் என்றால் என்ன?
குண்டர் தடுப்பு சட்டமே குண்டர் சட்டமாக சுருங்கி விட்டது. அரசியல் சட்டப்படி, ‘தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்’ தான் ‘குண்டர் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது
இந்தச் சட்டத்தின் மூலம் காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க முடியும்.மாநகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
குண்டர்கள் என்பவர்கள் யார்?
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் படி குண்டர்கள் என்ற வார்த்தை குறித்து விளக்கும்போது, சட்டப் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் (ஒரு வருடம்) தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு ஜாமினும் வழங்கப்படாது. அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. அதே நேரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்றும் சட்டத்தின் ஷரத்து கூறுகிறது. இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினார், அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும்.
இந்த விசாரணை குழுவானது,
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும். இந்த குழுவினர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது சரியா என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். அதைத்தொடர்ந்து அவர்மீதான நடவடிக்கை தொடரும்.
இந்த குண்டர் சட்டம்தான் தமிழகத்தில் அந்தந்த காலகட்டத்தில் ஆளும் ஆளுங்கட்சியின் அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
