
`அவரைக் காப்பாத்தணும்ங்கிறது மட்டும்தான் மனசுல இருந்துச்சு!’ – உயிரைக் காப்பாற்றிய செவிலியர் வனஜா
சாலை விபத்துகளில் சிக்கி யாராவது பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் கிடந்தால், அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் பலர், `ஐயோ பாவம்… உயிர் இருக்கா என்னனு தெரியலையே’ என்ற வார்த்தைகளோடு கடந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காவல்துறையினரால் ஏதேனும் பிரச்னை வருமோ என அச்சம்தான். ஆனால் இது தேவையற்ற பயம், சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களுக்கு எவரேனும் உதவினால் அவர்களுக்கு உரிய மரியாதையும் நன்றியும் செலுத்தப்படும் என்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள்.
இதோ ஒரு கண்முன் உதாரணம்…. விபத்து ஏற்பட்டு உயிருக்குப் போராடிய கல்லூரி மாணவரை முதலுதவி சிகிச்சை மூலம் காப்பாற்றிய மன்னார்குடி செவிலியருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக காவல்துறை உயர் அலுவலர்கள் மனிதநேய செவிலியரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: நின்றுபோன மாணவரின் இதயத்துடிப்பு; சாலையில் செவிலியர் செய்த முதலுதவியால் மீண்ட உயிர்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலை விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்று போய் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை, அந்த வழியாக வந்த செவிலியர், கொஞ்சமும் தாமதிக்காமல் சாதூர்யமாக செயல்பட்டுக் காப்பாற்றினார். சாலையில் கிடந்த அந்த மாணவருக்கு செவிலியர் அவசர சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் வனஜா. இவர் தனது குடும்பத்தினருடன் காரில், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சென்றுவிட்டு, மன்னார்குடிக்கு வந்துகொண்டிருந்தபோது, மதுக்கூர் சாலையில் உள்ள லெக்கணாம்பேட்டை அருகே டுவீலரில் சென்றுகொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர், ஆடுகளின் மீது மோதி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். காரில் சென்று கொண்டிருந்த செவிலியர் வனஜா, உடனடியாக காரை நிறுத்திவிட்டு, அந்த மாணவரை காப்பாற்றும் முயற்சியில் துரிதமாக செயல்பட்டார். மயக்கம் அடைந்த நிலையில் கிடந்த மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்ததோடு, இதயம் துடிப்பற்ற நிலையில் இருந்தது. அதை உணர்ந்துகொண்ட செவிலியர் வனஜா, அந்த மாணவரின் மார்பில் தனது இரு கைகளையும் வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த மாணவரின் இதயம் மீண்டும் செயல்படத் தொடங்கி, சுயநினைவு திரும்பியது.

உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைத்து, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவரை அனுப்பி வைத்தார் செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையிலிருந்து உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த மாணவர் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாணவர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லியம்பட்டினத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வசந்த் என்பதும், இவரது சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி என்பது தெரிய வந்தது. சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் வசந்த்திற்கு, கொஞ்சமும் தாமதிக்காமல் மனிதநேயத்துடன் அவசர முதலுதவி சிகிச்சை அளித்த செவிலியர் வனஜாவிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இதுகுறித்து பேசும் செவிலியர் வனஜா, “அந்தப் பையனை எப்படியாவது காப்பாத்திடணும்ங்கிற எண்ணம் மட்டும்தான் அப்ப எனக்கு இருந்துச்சு. காவல்துறையால் ஏதாவது பிரச்னை வருமா, விசாராணைக்கு பதில் சொல்ல வேண்டியதிருக்குமா அப்படிங்கறதை பத்தியெல்லாம் நான் கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை’’ என்றார்.
இந்நிலையில்தான், செவிலியர் வனஜாவின் சமூகப் பொறுப்புணர்வுள்ள செயலுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், செவிலியர் வனஜாவை நேரில் சந்தித்து, “உங்களது அர்ப்பணிப்பு உணர்வும், சமூக அக்கறையும் எங்களை நெகிழ வைத்தது. உங்களது செவிலியர் சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்ததோடு நற்சான்றிதழ் வழங்கியும் கவுரவித்தார். மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்போடும் சமூகப் பணிகளில் ஈடுபடக்கூடியவர்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி கவுரப்படுத்துவது, மற்றவர்களும் இதை நோக்கி நகர ஊக்கமளிக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Also Read: 108 ஆம்புலன்ஸில் பிரசவம்; மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!
தமிழக அரசு, `ஒரு விபத்து நடந்த பின்னர், துளியும் தாமதிக்காமல் பாதிக்கப் பட்டவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டிய, உயிர் காக்கும் பொன்னான நேரத்தில் (Golden Hour), சாலை விபத்தில் பாதிக்கப்பட்டரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5,000/- பரிசாக வழங்கப்படும்’ என சமீபத்தில் அறிவித்தது. தக்க நேரத்தில் முதலுதவி கிடைக்கச் செய்து பல உயிர்களை இத்திட்டம் காப்பாற்றும், அச்சம், தயக்கம், பொறுப்புத் துறப்பு இன்றி பலரையும் முதலுதவி நோக்கி இது நகரச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🔊 Listen to this சாலை விபத்துகளில் சிக்கி யாராவது பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் கிடந்தால், அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் பலர், `ஐயோ பாவம்… உயிர் இருக்கா என்னனு தெரியலையே’ என்ற வார்த்தைகளோடு கடந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காவல்துறையினரால் ஏதேனும் பிரச்னை வருமோ என அச்சம்தான். ஆனால் இது தேவையற்ற பயம், சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களுக்கு எவரேனும் உதவினால் அவர்களுக்கு உரிய மரியாதையும் நன்றியும் செலுத்தப்படும் என்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள். இதோ ஒரு கண்முன்…
🔊 Listen to this சாலை விபத்துகளில் சிக்கி யாராவது பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் கிடந்தால், அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் பலர், `ஐயோ பாவம்… உயிர் இருக்கா என்னனு தெரியலையே’ என்ற வார்த்தைகளோடு கடந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காவல்துறையினரால் ஏதேனும் பிரச்னை வருமோ என அச்சம்தான். ஆனால் இது தேவையற்ற பயம், சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களுக்கு எவரேனும் உதவினால் அவர்களுக்கு உரிய மரியாதையும் நன்றியும் செலுத்தப்படும் என்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள். இதோ ஒரு கண்முன்…